இலங்கையில் சமத்துவம், நீதி மற்றும் அமைதி நிலைநாட்டப்படுவதற்கு நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதை இந்திய முக்கியமாக கருதும் நிலையில் 13வது திருத்தத்தை இலங்கை அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்தி தமிழர்களுக்கு மரியாதையும் கண்ணியமும் நிறைந்த வாழ்க்கையை உருவாக்கும் என நம்புகிறோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை டில்லியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ரணிலுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி,
75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு இருதரப்பு உறவுகளுக்கு முக்கியமான ஆண்டாகும்.
மேலும், இந்த ஆண்டு மலையகத் தமிழர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் மலையகத் தமிழர்களுக்காக 75 கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்களை அறிவிப்பதுடன் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
பாதுகாப்பான மற்றும் வளமான இலங்கை என்பது இந்தியாவின் நலனுக்காக மட்டுமல்ல, முழு இந்தியப் பெருங்கடல் பகுதியின் நலனுக்காகவும் உள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.





