சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் தாம் ஆற்றிய உரையினை ஊடகம் ஒன்று திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளது எனவும் இதனால் வைத்தியர்கள் பாதித்திருந்தால் மன்னிப்பு கோருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் நான் உரையாற்றி இருந்தேன். அதனை ஊடகம் ஒன்று திரிவுபடுத்தி அதன் ஊடாக வைத்தியர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமை நான் அறிந்துள்ளேன். அது தொடர்பிலான விளக்கத்தினை கொடுக்கவேண்டிய நிலையில் இதனை தெரிவிக்கின்றேன்.
அன்றையதினம் இலங்கையின் வைத்தியர்கள் சுகாதாரதுறைக்கு ஆதரவாகத்தான் எனது உரை அமைந்திருந்தது. ஆனால் அதில் வார்த்தை பிரயோகங்கள் சொல்லாடல்கள் மூலமாக யாழ் வைத்தியர்கள் மனநோயாளிகள் என்று தலைப்பிட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அப்படியான வார்த்தை பிரயோகத்தினை நான் பயன்படுத்தவில்லை ஆனால் வைத்தியர்கள் இன்று மன உளைச்சலில் மன விரக்தியில் மனநோயாளிகளை போன்று இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
அதற்கு காரணம் இந்த அரசாங்கம். அதனால்தான் வைத்தியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிக்கின்றார்கள் என்று எனது உரை அமைந்துள்ளது. ஒரு ஊடகம் என்னுடைய உரையினை திரிவுபடுத்தி யாழ் வைத்தியர்கள் மனநோயாளிகள் என்று செய்தியினை போட்டுள்ளார்கள். யாழ் வைத்தியர்கள் என்ற சொல்கூட நான் பாவிக்கவில்லை இதனால் வைத்தியர்கள் மனவேதனையடைந்ததை நான் அறிவேன் அந்த வகையில் அந்த சொல்லாடல் வைத்தியர்களின் சேவையினை புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கோருகின்றேன்.
அதேவேளை, என்னுடைய பாராளுமன்ற உரையினை முழுமையாக கேட்கின்றபோது தெரியும் அன்றைய உரை வைத்தியர்களுக்கு ஆதரவாக என்னால் ஆற்றப்பட்ட உரை சிலவேளைகளில் அந்த சொல்லாடல் அவர்களை பாதித்திருந்தால் என்னுடைய வருத்தத்தினை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.