திருமலையில் நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றிய பௌத்த பிக்கு…! மக்கள் விடுத்த கோரிக்கை…!

குலதெய்வமாக வழிபட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை -குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் வளத்தாமலையடி பகுதியில் உள்ள நாகதம்பிரான் ஆலயமானது 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பௌத்த பிக்கு ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் சப்த நாக விகாரையாக மாற்றப்பட்டு திரியாய் மக்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆலயத்தில் திரியாய் மக்கள் பரம்பரை பரம்பரையாக குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், 1984 ஆம் ஆண்டு இடம்பெயர்வில் சென்று மீண்டும் 2002 ஆம் ஆண்டு வந்து வழிபாட்டில் ஈடுபட்டு வந்த நிலையில் 2021 ஆண்டளவில் பௌத்த பிக்கு ஒருவரினால் தமிழ் மக்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதியில் புதையல் தோண்டியுள்ளதாகவும் திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை தமது வாழ்வாதார தொழிலாக கொண்டுவரும் திரியாய் மக்கள் நெல் விதைப்பின்போதும், அறுவடையின்போதும் வளத்தாமலையடி நாகதம்பிரானுக்கு நேர்த்தி வைத்து பொங்கிப் படைத்த பின்னரே தமது தொழிலைத் தொடங்குவதாகவும், புல்மோட்டையைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள்கூட நம்பிக்கை வைத்து நேர்த்தி வைத்து வந்ததாகவும் திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது குறித்த ஆலயத்தை வழிபட முடியாமலும் நேர்த்திக்கடன்களை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளமையினாலும் ஆலயத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புல்மோட்டை பிரதான வீதியில் நின்று ஆலயத்தை பார்த்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

எனவே, தங்களுக்கு துன்பங்கள் வருகின்றபோதெல்லாம் உச்சரிக்கின்ற வளத்தாமலையானை வழிபடுவதற்கு அனுமதி வழங்குமாறு திரியாய் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *