வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை…! சுரேன் ராகவன் தெரிவிப்பு…!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு  சிறந்த தீர்வை வழங்குவதற்கு காத்திருக்கின்றது.

அதன்படி, இது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது துரதிஷ்டவசமான விடயம் எனவும் எதிர்கால சந்ததி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த தொழில்சார் நடவடிக்கைகள் காரணமாக சுமார் 150 மில்லியன் ரூபா நேரடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது 1.8 மில்லியன் மனித நேரத்தை வீணடிப்பதுடன், மேலும் ஒரு மணிநேரத்தை வீணடிக்க அரசாங்கம் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொழிற்சங்கங்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அடுத்த ஆறு மாதங்களுக்கு 1.1 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாகவும், இந்த பிரச்சினைக்கான தீர்வை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் திறைசேரியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *