இறந்துவிட்டதாக கூறப்படும் இலங்கை அகதி ஒருவர், உயிருடன் இருப்பதாகவும் அவரை திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து மதுரை முகாமுக்கு மாற்றுமாறும் சென்னை மேல்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது
குறித்த அகதியின் மாமி முறையான உறவினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக காந்தன் என்ற கே. கிருஸ்ணக்குமார், இறந்துவிட்டதாகவும் எனவே அவர் இந்தியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையகம் அறிவித்திருந்தது.
எனினும் கிருஸ்ணக்குமார் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அவரை திருச்சி முகாமில் இருந்து மதுரை முகாமுக்கு மாற்றவேண்டும் என்றும் அவரின் மாமியார் சென்னை மேல்நீதிமன்றில் மேன்முறையீட்டை செய்துள்ளார்.
மனுதாரரான 63 வயதான டி.நாகேஸ்வரி, தானும் தனது குடும்பத்தினரும் 1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்ததாகவும் அன்றிலிருந்து மதுரை முகாமில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமது மருமகன் கிருஸ்ணகுமார், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2015 இல் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் ராமநாதபுரத்தில் உள்ள நீதிமன்றம் அவருக்கு 2018 இல் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.பின்னர் தண்டனை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இதன் பின்னர் சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, 2022 ஜூலை முதலாம் திகதியன்று அவரை விடுவித்தது. எனினும் அன்றிலிருந்து திருச்சியின் முதல்வர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
இந்நிலையில் மதுரை சிறப்பு முகாமில் தன்னுடன், அவரை தங்க அனுமதிக்கக் கோரி அவர் அளித்த பல முறைப்பாடுகள் இன்றுவரை பரிசீலிக்கப்படவில்லை.
இதனையடுத்து தமது மருமகனான கிருஸ்ணகுமார், தம்மை தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்க அனுமதி கோரி 2023 ஜூலை 12 அன்று முதல்வரின் சிறப்புப் பிரிவிடம் கோரியிருந்தார்.
முதல்வரின் சிறப்புப் பிரிவு, தேவையான நடவடிக்கைக்காக 2023 ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையகத்துக்கு அந்த கோரிக்கையை அனுப்பியது.
இதன்போது, விண்ணப்பதாரர் காந்தன் என்கிற கிருஸ்ணகுமார் இறந்துவிட்டதால், அவரது பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆணையகம் அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், தனது மருமகன் உயிருடன் இருப்பதாக மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்
தாமே ஆணையாளரிடம் இருந்து தகவல்தொடர்புகளைப் பெற்றதாகக் கூறிய மனுதாரர், அதிகாரிகள் உண்மைகளை சரியாக சரிபார்க்கத் தவறிவிட்டனர் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே தமது மருமகனை திருச்சியில் இருந்து மதுரை சிறப்பு முகாமுக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.





