தீர்வு வழங்காது இழுத்தடிக்கும் அதிகாரிகள்; 300வது நாளில் அமைதிப் போராட்டத்தில் குதித்த மாதவனை பண்ணையாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு,மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள்கள் இன்றைய தினம் அமையதியான முறையிலான கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்னை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெரும்பான்மையினத்தவர்களினால் முன்னெடுக்கப்படும் மேய்ச்சல் தரை அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி தொடர்ந்து போராடிவரும் கால்நடை பண்ணையாளர்கள் தாங்கள் போராட்டம் ஆரம்பித்து 300வது நாளான இன்று இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர் சங்க தலைவர் நிமலன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களான வேலன் சுவாமிகள், அருட்தந்தை ஜெகதாஸ், எஸ்.சிவயோகநாதன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை லூத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தமது மேய்ச்சல் தரை காணிகள் அபகரிக்கப்பட்டு தமது வாழ்வாதாரம் முற்றாக பறிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள அத்துமீறிய குடியேற்றக்காரர்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ள அத்துமீறிய குடியேற்றக்காரர்களை வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மகாவலி அபிருத்தி அதிகாரசபை மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு பணிப்புரைகளை வழங்கியபோதிலும் இதுவரையில் அவர்கள் வெளியேற்றப்படவில்லையெனவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாதவனை பகுதியில் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் அங்குள்ள அத்துமீறிய குடியேற்றக்காரர்களை அங்கிருந்து அகற்றுமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை கூட அமுல்படுத்தமுடியாத வகையில் பொலிஸார் உள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் ஒரு கம்பு வெட்டினாலும் கைதுசெய்து வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரிகள் அங்கு அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுப்போர் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையெனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

மேய்ச்சல் தரை காணிப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக காணிகளை வழங்கவும் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் குளங்களை புனரமைக்கவும் வீதிகளை புனரமைக்கவும் நடவடிக்கையெடுப்பதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென பண்ணையாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.

நாங்கள் தனி நாட்டு கோரிக்கைக்காக போராடவில்லை. எமது கால்நடைகள் மூலம் நாங்கள் வாழவேண்டும் என்பதற்காகவே 300வது நாளாக போராடுகின்றோம்.

எமது போராட்டத்திற்கான நியாயத்தினை ஜனாதிபதி  ஏற்றுக்கொண்டு, எமக்கான தீர்வினை வழங்குவதாக உறுதியளித்தபோதிலும் இதுவரையில் எங்களுக்கு எந்த தீர்வும் வழங்கப்படவில்லையென கால்நடை பண்ணையாளர் அமைப்பின் தலைவர் நிமலன் தெரிவித்தார்.

Leave a Reply