மட்டக்களப்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி- மாவட்ட செயலாளர் கருத்து..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், 442 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் ஜனாதிபதி தேர்தலுக்கான மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றுவரையில் 46 தேர்தல் சட்ட விதிமுறை மீறல்கள் மட்டுமே மீறலாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் எந்த தேர்தல் வன்முறைகளும் பதிவுசெய்யப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் ,

21ஆம் திகதி நடைபெறவுள்ள 09வது ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஆயத்தங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளன.இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக 442 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன.

அவை 81 வலயங்களாக செயற்படுத்தப்படுகின்றன.வாக்களிப்பு நிலையங்களின் தூரங்கள்,மக்கள் தொகைகளைக்கொண்டு இந்த வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதற்கு பொறுப்பாக வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்களிப்பு நடவடிக்கைகள் 21ஆம் திகதி காலை 07மணி தொடக்கம் நடைபெறும்.இதற்காக அலுவலகர்களுக்கான பயிற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் இன்றைய தினம் வரையில் 46 தேர்தல் சட்ட விதிமுறை மீறல்கள் மட்டுமே மீறலாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித தேர்தல் வன்முறைகளும் பதிவுசெய்யப்படவில்லை.

தேர்தல் சட்ட விதிமுறை மீறல்கள் என்னும் இடமாற்றம்,பதிவு உயர்வு போன்ற முறைப்பாடுகள்,சுவரொட்டிகள் ஒட்டிய முறைப்பாடுகளே அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.

சில இடங்களில் பொலிஸ் நிலையங்களுக்கு முன்பாகவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து சுவரொட்டிகளை அகற்றி வருகின்றனர்.

கட்சி அலுவலகத்தில் மட்டும் அதுவும் குறிப்பிட்ட அளவிலேயே சுவரொட்டிகளை ஒட்டமுடியும்.சில இடங்களில் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில் கூட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அது தொடர்பான விபரங்கள் கிடைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்டு அவை அகற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *