சித்திரை புத்தாண்டு வாரத்தில் நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், தற்போது நாடு முழுவதும் சுமார் 29,000 பேர் விபத்துகள் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தொற்றுநோய் பிரிவின் விபத்துத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சமூக நல மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க இது குறித்துத் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துகள் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 29,000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துகள் தொடர்பான திடுக்கிடும் புள்ளிவிவரங்களை அவர் இதன்போது வெளியிட்டார்:
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 இலட்சம் பேர் விபத்துகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இவர்களில் பெரும்பான்மையானோர் புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களிலேயே விபத்துகளுக்கு உள்ளாகின்றனர்.
பொதுவாக மேல் மாகாணத்தில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தாலும், விபத்துகளைப் பொறுத்தமட்டில் மேல் மாகாணத்தை விட ஏனைய மாகாணங்களிலேயே அதிகப்படியான விபத்துகள் பதிவாகுவதாக மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பயணங்களின் போது ஏற்படும் விபத்துகளைத் தவிப்பதில் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனச் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, மதுபோதையில் வாகனம் செலுத்துவதைத் தவிர்த்தல், பட்டாசு மற்றும் வானவேடிக்கைகளின் போது மிகுந்த அவதானத்துடன் இருத்தல், நீர்நிலைகளில் நீராடும் போது பாதுகாப்புடன் இருத்தல்.
இந்த மகிழ்ச்சியான பண்டிகைக் காலம் துயரமாக முடிவடையாமல் இருக்க, ஒவ்வொரு பிரஜையும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனச் சுகாதாரப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.





