வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினருக்கும் வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகன் இடையிலான முதற்கட்டக் கலந்துரையாடல், இன்று (15) புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின்போது கௌரவ ஆளுநர் அவர்கள் வழங்கிய முக்கிய வழிகாட்டல்கள் வருமாறு,
மாகாண சபை நிர்வாகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதும், அரச சேவைகள் எவ்விதத் தடங்கலுமின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதுமே இக்குழு உருவாக்கத்தின் பிரதான நோக்கமாகும்.
ஆளுநர் செயலகத்துக்குத் தினமும் ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இவை குறித்து அந்தந்தத் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தினாலும், உரிய காலப்பகுதிக்குள் தீர்வுகள் எட்டப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் ஆட்சியில் அமர்த்தியதன் பிரதான நோக்கம் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பதாகும்.
எனவே, இந்தக் குழு முன்னெடுக்கும் கள ஆய்வுகள் மற்றும் விசாரணைகளில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இருக்காது.
நீங்கள் முழுமையான சுயாதீனத்துடன் செயற்பட முடியும்.
மாகாண சபைக்கு ஒதுக்கப்படும் நிதி வினைத்திறனான முறையில் செலவிடப்படுகின்றதா என்பதை இக்குழு தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்.
அத்துடன், அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்கள் கடமையில் இல்லாமை மற்றும் சேவைகளை வழங்கத் திட்டமிட்டு இழுத்தடித்தல் போன்ற பொதுமக்களின் முறைப்பாடுகள் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தி, அவற்றுக்குரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில், விசாரணைகளை முன்னெடுக்கும்போது தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும், கடந்த காலங்களில் நிலவிய விசாரணைக் குறைபாடுகளை எவ்விதம் நிவர்த்தி செய்வது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் மற்றும் விசேட குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.





