2004 ஐப் போன்றஅரசியல் ஒற்றுமைமீண்டும் வேண்டும்-தமிழ்க் கட்சிகளுக்கு முன்னாள் எம்.பி. கருணாகரம் அறைகூவல்!

தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வறட்டுக் கௌரவங்களை விடுத்து, 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் போன்றதொரு பலமான ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு ஒன்றுபட்டால் மாத்திரமே வடக்கு – கிழக்குத் தமிழர்களுக்கு வளமான எதிர்காலம் அமையும்” என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கண்ணனி விளையாட்டு மைதானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு’ இன்று திறந்து வைக்கப்பட்டது. தனது 40 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இவ்விளையாட்டரங்கைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தற்போதைய அரசு ஆட்சிக்கு வரும்போது வடக்கு – கிழக்கு மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கியது. புதிய அரசமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலைத் தடுத்தல் போன்ற வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த காலங்களில் நாட்டை ஆண்ட அரசுகளின் அதே பாணியிலேயே தற்போதைய அரசும் பயணிக்கின்றது.

2009 இற்கு முன்பு தமிழ் மக்களிடையே நிலவிய பலமான ஒற்றுமை தற்போது சிதைந்து போயுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் பல கூறுகளாகப் பிரிந்து கிடப்பது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். கடந்த தேர்தலில் வடக்கு – கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளை விடத் தேசிய மக்கள் சக்தி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இனியாவது தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு பொதுவான தீர்வுத் திட்டத்தை நோக்கி அனைத்துக் கட்சிகளும் நகர வேண்டும். இதற்காகக் கொழும்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

சர்வதேசத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் நமது கோரிக்கைகள் ஒரே குரலில் ஒலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

2009 இற்கு முன் நிலவிய அரசியல் பலத்தை மீண்டும் உருவாக்கத் தவறினால், வடக்கு – கிழக்குத் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். வறட்டுக் கௌரவங்களைப் புறந்தள்ளி, தூரநோக்கோடு கட்சிகள் செயற்பட முன்வர வேண்டும்.” – என்றார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எம்.வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுக் கழகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply