முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் இடம் பெற்றது.
சிறைச்சாலை ஆணையாளர் சந்திரகாந்தனை தகுதியான சிறைச்சாலைக்கு மாற்றுங்கள், கைதிகளும் மனிதர்களே சந்திரகாந்தனின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தீர்வு கொடுங்கள், சந்திரகாந்தன் அவர்களுக்கு தடுப்பு காவல் கைதிக்கான வசதிகளை வழங்க வேண்டும், இலங்கை நீதித்துறையை மதிக்கின்றோம் உண்ணாவிரத போராட்டத்திற்கு தீர்வு கொடுக்கவும் என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கருப்புப்பட்டி அணிந்து அமர்ந்தவாறும் அமைதியான முறையில் தங்களது அடையாள சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அடையாள சத்யாக்கிரக போராட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிறையில் சந்திரகாந்தனின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அவருக்கு உரிய முறையில் சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவே சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளை சரி வழங்க வேண்டும் எனவும், வேறு சிறைக்கு அவரை மாற்றி அவருக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் எனவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் பிரதி அமைச்சராகவும் இருந்த ஒருவர் மக்களின் தேவைகளை நிறைவேற்றிய ஒருவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி இவ்வாறு ஒருவரை அடிப்படை கைதிகளுக்கு வழங்குகின்ற சலுகைகளை கூட வழங்காமல் வைத்திருப்பது வேதனை அளிப்பதாகவும் சரியான ஒரு தீர்வை ஜனாதிபதியும் சிறைச்சாலை ஆணையாளரும் வழங்க வேண்டும் எனவும் இதன் போது முன் வைக்கப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டமை மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் ஆகியனவற்றின் சந்தேக நபராக பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





