அரசியல் தீர்வுதான் நாட்டின் எதிர்காலம் – சிறிநேசன் எம்.பி. திட்டவட்டம்

“பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என அரசு எண்ணக்கூடாது. புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு எட்டப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கு வளமான எதிர்காலம் அமையும்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் (ஜனா) 40 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட ‘ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு’ மற்றும் புனரமைக்கப்பட்ட மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈராக்குக்கு எதிராக முன்னெடுக்கும் போர் நடவடிக்கைகள், உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையேற்றத்துக்கு வழிவகுத்துள்ளன. இதன் தாக்கம் இலங்கையின் சாமானிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. திறைசேரியில் தற்போதுள்ள நிதியைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மானியங்களையும் நிவாரணங்களையும் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்.

கடந்த காலங்களில் பதவி வகித்த மூன்று ஜனாதிபதிகளும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த முக்கிய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டனர். தற்போது இரண்டாம் மட்டச் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் உள்ள ‘பிரதான ஆளி’ யார் என்பது மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. ஆட்சி மாற்றத்திற்காக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் பல கோடிக்கணக்கான நிதியை மீட்டு, அதனை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வீட்டுத் திட்டங்களுக்காக அரசு பயன்படுத்த வேண்டும். அதேவேளை, தொல்லியல் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். பௌத்தர்கள் இல்லாத இடங்களில் விகாரைகளை அமைப்பது நல்லிணக்கத்தைப் பாதிக்கும்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு இடதுசாரிச் சிந்தனையுடன் செயற்படுவதாகக் கூறினால், கடந்த 75 வருட கால இனவாத அரசியலை விடுத்து, அனைத்து மக்களையும் சமமாக மதித்து இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும். அவ்வாறில்லாமல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், இதுவும் கடந்த காலங்களைப் போன்றதொரு இனவாத அரசாங்கமாகவே மக்களால் பார்க்கப்படும்.” – என்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply