மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு – லிட்ரோ உறுதி

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகம் நடைபெறும் என அறிவித்துள்ளது. 

நாட்டில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாது என்பதற்காக தேவையான கையிருப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்காக ஏற்கனவே 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு கிடைத்துள்ளதுடன், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு வரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த கையிருப்புகள் மாலைதீவு பகுதியில் உள்ள மிதக்கும் சேமிப்பு முனையத்தில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 20,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று தென்னாப்பிரிக்கா வழியாக மாலைதீவை நோக்கி பயணித்து வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பண்டிகைக் கால தேவைகளை கருத்தில் கொண்டு, சந்தையில் போதுமான அளவு எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், நுகர்வோருக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பண்டிகைக்குப் பிறகு தொடர்ந்தும் தேவைக்கேற்ப எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்றும், ஏப்ரல் 16 முதல் வழக்கமான நிரப்பு மற்றும் விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply