“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தற்போதைய அரசாங்கம், தனது தோல்விகளை மறைக்கவே அரசியல்வாதிகளைச் சிறையிலடைக்கும் பழிவாங்கல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது” என்று ஸ்ரீலங்கா பொதுஜ பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று நேரில் சந்தித்து, நலன் விசாரித்த பின்னரே அவர் ஊடகங்களுக்கு இக்கருத்துக்களை வெளியிட்டார்.
தற்போதைய அரசாங்கம் தமக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணையை முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது. கடந்த காலத்தைப் போலவே அரசியல் பழிவாங்கல்களில் மாத்திரமே அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத அரசாங்கம், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே முன்னாள் அமைச்சர்களைத் திட்டமிட்ட முறையில் சிறையில் அடைத்து வருகின்றது.” – என்றார்.
சிறையிலுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மிகவும் உறுதியான மனநிலையில் உள்ளதாகத் தெரிவித்த நாமல், அரசியல் ரீதியான இவ்வாறான சவால்கள் தமக்குப் புதியவை அல்ல என்றும் குறிப்பிட்டார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும், நீதிமன்றத்தை ஒருபோதும் விமர்சிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனினும், அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் இத்தகைய கைதுகளுக்கு எதிராக நீதிமன்றம் உரிய நீதியை வழங்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
கடந்த அரசாங்கத்தின் பாதையிலேயே தற்போதைய ஆட்சியாளர்களும் பயணிக்கின்றனர் எனச் சாடிய நாமல் ராஜபக்ஷ, இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகள் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை ஒருபோதும் மறைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.




