அரச காணியை தனியார் ஒருவர் கைப்பற்றி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் குடத்தனை வடக்கு மக்கள் இன்றைய தினம் 11:00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் அரச காணியை தனியார் ஒருவர் அபகரித்து அதனை பிறிதொரு நபருக்கு விற்பனை செய்துள்ளதாகவும், அதற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், கிராம சேவகர் ஆகியோரை துணை நிற்பதாகவும் தெரிவித்தும், அக்காணி அரச காணி என வட மாகாண காணி அணையாளர் அறிவித்தும் அதற்கு எதிராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்துடன் குறித்த காணிக்கு வடக்கு பக்கமாக கோயில் ஒன்று உள்ளதாகவும், ஆனால் கோயில் கிழக்கு பக்கம் உள்ளதாகவும் பொய்யான எல்லை காட்டி பிரதேச செயலர் வடக்கு காணி அணையாளருக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக்கவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரச காணியை தனியாருக்கு வழங்க முயற்சிக்கும் பிரதேச செயலர், காணி உத்தியோகத்தர், கிராம சேவகர் ஆகியோரை இடமாற்றம் செய்யுமாறும் கோஷம் எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த அரச காணியை தனியாருக்கு வழங்குவதை நிறுத்தமாறு கோரி பிரதேச செயலருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப் பட்டுள்ளது.



