பலாக்காய் பறிக்க சென்ற முதியவர்; மரத்தில் இருந்து கிணற்றில் விழுந்து பலி

மஸ்கெலியாவில் பலாக்காய் பறிக்கச் சென்ற முதியவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (20) பிற்பகல் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரவுன்சீக் தோட்டத்தின் ராணி பிரிவில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் 68 வயதுடைய முத்துராமன் கிருஷ்ணசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தோட்டத்தில் வேலை முடித்து வீடு திரும்பிய அவர், தனது விவசாயத் தோட்டத்தில் இருந்த பலா மரத்தில் காய்களைப் பறிக்கச் சென்றுள்ளார்.

இதன்போது மரத்தில் ஏறிய நிலையில் தவறி கீழே விழுந்த அவர், மரத்தின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கிணற்றுக்குள் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் நாளை உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply