முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்திற்குள் குறித்த கொக்கிளய் – புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்துள்ளார்.
பாராளுமன்ற குழு அறையில் 21.05.2026இன்று இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
கொக்கிளாய் புல்மோட்டை இணைப்பு பாலம் அமைக்கப்படவேண்டுமென தொடர்ச்சியாக எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் கடந்த 07.03.2025 அன்று இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமானசேவைகள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் குறித்த பாலத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.
அதனைத் தொடர்ந்து 13.08.2025 ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது கொக்கிளாய் – புல்மோட்டை பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தேன். இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதியால் அதன்போது என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து சாத்திய வள ஆய்வுகளும் உரிய தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
இத்தகைய சூழலில் கடந்த 11.02 2026 அன்று அமைச்சர் விமல் ரத்நாயக்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைக்குமாறு அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் மீண்டும் வலியுறுத்தியிருந்தேன்.
அந்தவகையில் குறித்த பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வுகளை மேற்கொண்டுவரும் தரப்பினர், மே மாதத்திற்குள் அந்த சாத்தியவள ஆய்வுகளின் அறிக்கைகளை தம்மிடம் சமர்ப்பித்தால் குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமென அப்போது அமைச்சர் விமல் ரத்நாயக்க என்னிடம் உறுதியளித்திருந்தார்.
அதற்கமைய 15.05.2026 கடந்தவாரம் இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் குறித்த இணைப்புப் பாலத்தின் சாத்தியவள ஆய்வு அறிக்கை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் வினவியிருந்தேன். இதன்போது குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கையை தாம் அமைச்சிற்கு ஏற்கனவே அனுப்பிவிட்டதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளரால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேதான் 21.05.2026இன்று நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி விடயங்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில், குறித்த பாலத்தினை அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வு அறிக்கைகள் உரியதரப்பினரால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட விடயத்தினைச் சுட்டிக்காட்டியதுடன், குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் விமல் ரத்நாயக்க அவர்களிடம் வலியுறுத்தியிருந்தேன்.
அதற்கமைய இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்க குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்பு பாலம் அமைப்பது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் சபையிலேயே கலந்துரையிருந்தார்.
குறிப்பாக இந்தப்பாலத்தை அமைப்பது தொடர்பில், ஏற்கனவே தம்மால் என்னிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட விடயத்தை இதன்போது சுட்டிக்காட்டி உரிய அதிகாரிகளிடம் ஆய்வறிக்கை முடிவுகளைக் கேட்டறிந்து கொண்டார்.
அத்தோடு எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்திற்குள் குறித்த கொக்கிளய் – புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான ஆரோக்கியமான முடிவுகளை எடுப்போமென அமைச்சர் விமல் ரத்நாயக்கவால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் இந்தப் பாலம் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்ட மக்களுக்கான பாலமென்பதால் அந்தப் பாலத்தை பயன்படுத்தப்போகின்ற அனைத்து மக்கள் சார்பாகவும் அமைச்சர் விமல் ரத்நாயக்க அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்திருந்தேன்.
அத்தோடு குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க மற்றும் வன்னிமாவட்ட அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனுக்கும் எனது நன்றிகளை இதன்போது தெரிவித்தேன் – என்றார்.





