பலமுறை அழைத்தும் எடுக்காத பெற்றோர் – இறுதியில் பிள்ளைகளை உலுக்கிய அதிர்ச்சி காட்சி

டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் இருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த கொடூர சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டிக்கோயா நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த தம்பதியினரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 82 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் அவரது மனைவி 82 வயதுடைய சகுந்தலாதேவி  என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, 

இந்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருவதாகவும், நீண்டகாலமாக கடை நடத்தி வந்த இவர்கள் தற்போது வியாபாரத்தை நிறுத்தி அதே இடத்தில் வாழ்ந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இனம் தெரியாத நபர் ஒருவர் கடைக்குள் நுழைந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், தம்பதியினருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள பிள்ளைகள் பலமுறை முயற்சித்தபோதும் பதில் கிடைக்காததால், அவர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் கடையைத் திறந்து பார்த்தபோது, தம்பதியினர் இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

பின்னர் உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply