கொடுக்கல் – வாங்கல் தகராறு:மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக வெட்டிக்கொலை!

மாத்தறை, திக்வெலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பணக் கொடுக்கல் – வாங்கல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கூரிய ஆயுதத்தால் வெட்டி நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு தரப்புக்கும் இடையே நீண்ட நாள்களாகக் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று இது குறித்து இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், எல்லை மீறிச் சென்று இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது. சந்தேகநபர் தன்னிடம் இருந்த கூரிய ஆயுதத்தால் அந்த நபரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் திக்வெலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மரணமடைந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகச் சாட்சியங்களின் அடிப்படையில் திக்வெலை பொலிஸார் உடனடி விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதற்கமைய, இந்தக் கொலையுடன் தொடர்புடைய 36 வயதுடைய பிரதான சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பொலிஸார் இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply