திருகோணமலை – கந்தளாய் பகுதியில் முச்சக்கரவண்டியும் இராணுவப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த தம்பதியினர் கந்தளாய் தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்று மாலை (21) கந்தளாய், 87ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கந்தளாய், அக்போபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியினரே இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.
கணவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கந்தளாய் மருத்துவமனையில் இரத்தம் சுத்திகரிப்பு சிகிச்சை பெற்றுக்கொண்டு, தனது மனைவியுடன் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பியுள்ளார்.
அவரே முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு மற்றும் மயக்கம் காரணமாக முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டி வீதியின் தவறான பக்கத்திற்குச் சென்று, எதிரே வந்த இராணுவப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் உடனடியாக கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பாக கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




