பொரளை இரட்டைக் கொலை வழக்கு: பிரதான குற்றவாளி பிடிபட்டார்

கொழும்பு – பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘சிறிசர உயன’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் கடந்த 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்திருந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வந்தது.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து நேற்று (22) அவர் நாட்டிற்கு திரும்பிய போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பின்னர் அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Leave a Reply