லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிலிகுற்றி தோட்டத்தில் 13 வயது பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக 45 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர் ஒருவரை லிந்துலை பொலிஸார் நேற்று முன்தினம் (21) மாலை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த நபருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டிலிகுற்றி தோட்ட தொழிலாளர்கள் நேற்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழுந்து மடுவத்தில் ஒன்றுகூடிய தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்தனர். பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் லிந்துலை மற்றும் பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





