‘கிளீன் ஸ்ரீலங்கா ’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டின் பல மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டங்கள் இன்று (23) ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
“அழகான கரையோரம் – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில், யாழ்ப்பாண பண்ணை கடற்கரை உள்ளிட்ட பல பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன.
இலங்கை இராணுவத்தின் வழிகாட்டலின் கீழ் நாடு முழுவதும் 256 கரையோர சுத்திகரிப்பு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதற்கிணங்க யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 30 இடங்களில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகளில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புகளுடன், அரச அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பங்கேற்றனர்.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 7 கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் 55ஆவது படைப் பிரிவு தலைமையில் பூநகரி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு அதிகளவில் பிளாஸ்டிக் மற்றும் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டன.
மேலும் திருகோணமலை வெருகல் பிரதேசத்திலும் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்கரை சிரமதானம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
அனைத்து நிகழ்வுகளிலும் பாதுகாப்பு படையினர், அரச ஊழியர்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்துகொண்டனர்.









