அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல நிர்வாக மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த மே 23ஆம் தேதி ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு குறித்த சங்கம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தக் கடிதத்தில், அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்ட கணக்கெடுப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வெளி அமைப்புகளை பயன்படுத்தியதால் தவறான தகவல்கள் கணினியில் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் உதவி பெற தகுதியில்லாத சிலர் திட்டத்தில் சேர்க்கப்பட்டதுடன், உண்மையில் உதவி பெற வேண்டிய பலர் தவறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் IWMS எனப்படும் கணினி அமைப்பில் நீண்டகாலமாக பல தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வீடுகளின் இருப்பிடத்தை சரியாக கண்டறிய முடியாமை, பதிவேற்றிய தகவல்கள் காணாமல் போதல், கணினி மந்தமாக இயங்குதல் போன்ற பிரச்சினைகளும் தொடர்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தரவு சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பிரதேச செயலக அதிகாரிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய மாதாந்திர ரூ.2500 கொடுப்பனவும் இதுவரை வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கணினி அமைப்பில் ஏற்படும் பிழைகளுக்கான பொறுப்பு பிரதேச செயலாளர்கள் மீது சுமத்தப்படுவதாகவும், கள அதிகாரிகள் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் QR முறையிலான கட்டுப்பாடுகள் காரணமாக கிராமங்களுக்கு சென்று தரவுகளை சேகரிப்பதும் கடினமாகியுள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களை உத்தியோகபூர்வமாக இந்த பணிகளில் இணைக்கும் திட்டமிட்ட நடைமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், அஸ்வெசும கணினி அமைப்பை மேம்படுத்தி, இலங்கை மின்சார சபை, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், விவசாய சேவை நிலையங்கள் மற்றும் வரித்துறை ஆகியவற்றின் தரவுகளையும் இணைத்து பயனாளிகளை துல்லியமாக தேர்வு செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.





