யாழ்ப்பாணம் நகரில் (ஜே/72 கிராம உத்தியோகத்தர் பிரிவு) யாழ் மாநகர சபைக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பெறுமதிமிக்க நிலம் ஒன்று, வெளிப்படுத்தல் உறுதி மூலம் தனிநபர் ஒருவருக்குப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கு முறைப்பாடு செய்துள்ளார்
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஆளுநர் இன்று (26.05.2026) சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, அந்த நிலம் யாழ் மாநகர சபைக்கு உரியது என்பதை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆவணங்களும் நில அளவைத் திணைக்கள வரைபடங்களும் உள்ளதாக மாநகர சபை ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தனர்.
எனினும், அந்த நிலத்தின் பெயர் மாற்றம் அங்கீகரிக்கப்பட்டதுடன், அதற்கான சோலை வரியும் அறவிடப்பட்டுள்ளமை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விடயங்களை பரிசீலித்த ஆளுநர், சந்தேகத்துக்கிடமான பெயர் மாற்றம் மற்றும் வரி அறவீட்டு செயல்முறைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.
மேலும், முறையற்ற வகையில் தனிநபர் வசமாகியுள்ள அந்த நிலத்தை மீண்டும் மாநகர சபைக்கு மீட்டெடுக்க நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கள ஆய்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர், யாழ் மாநகர சபை முதல்வர், உள்ளூராட்சி ஆணையாளர், மாநகர சபை ஆணையாளர், பிரதி முதல்வர், கிராம அலுவலர் மற்றும் காணி அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





