திருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரை ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ்களின் நேரத்தை சுழற்சி முறையிலான நேரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (26) ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கிழக்கு கரையோரப் பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரின் ஏற்பாட்டில், 20ற்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாமல் ஆளுநர் செயலகத்தின் முன்பாக தரித்து நிறுத்தப்பட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட சாரதிகள், நடத்துனர்கள் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள திட்டமிடல் பணிப்பாளர், அதிகார சபையின் தலைவர் ஆகியோர் அரச நடைமுறைகளையும், நீதிமன்ற கட்டளையையும் கருத்தில் கொள்ளாது தன்னிச்சையாக தங்களுக்கு வேண்டிய 3 பேருந்துகளை உட்புகுத்த முனைகின்றனர்.
இதற்காகவே நேரத்தைக் குறைத்து 14 வருடங்களுக்கு மேலாக நடைமுறையில் இருக்கின்ற ஒருங்கிணைந்த நேர அட்டவணையை சுழற்சி முறையிலான நேரத்திற்கு மாற்றி இதனை இன்றிலிருந்து நடைமுறைக்கு கொண்டு வருமாறும் கோரியுள்ளதாக பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
திருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரையான வீதியில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் 20 நிமிடம் தொடக்கம் 30 நிமிடம் வரையான நேர இடைவெளியில் ஒருங்கிணைந்த நேர அட்டவணைப்படி சேவையில் ஈடுபட்டு வருகின்றது.
இதில் சுமார் 18 தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு பேருந்திற்கும் ஒவ்வொரு நேரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தின் அடிப்படையில் சிறப்பான சேவையை மக்களுக்கு நாம் வழங்கி வருகின்றோம்.
இந்த முறையானது மாற்றப்பட்டு சுழற்சி முறையிலான சேவை இடம்பெறுமாக இருந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேருந்திற்கும் சுழற்சி முறையிலான நேரம் வழங்கப்படும். இதனால் வாடிக்கையாளர்களாக இருக்கின்ற பயணிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குவார்கள்.
அத்துடன் பேரூந்துகளுக்கிடையிலான நேரம் 30 நிமிடத்தில் இருந்து மேலும் குறைக்கப்படும். இதனால் போட்டித்தன்மை உருவாகி விபத்துக்கள் ஏற்பட வாய்புள்ளது.
எனவே நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கின்ற அதேபோன்று ஏனைய இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி தமது பேருந்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.





