ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை, எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கை, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அஸ்திக தேவேந்திர நீதிமன்றத்தில் விபரங்களை முன்வைக்கையில், தனது கட்சிக்காரர் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காகச் சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதால், அதற்கு ஏதுவாக தற்போது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு கோரினார்.
இதனைத் தொடர்ந்து, இக்கோரிக்கை தொடர்பான ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அடுத்த மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அன்றைய தினம் இருதரப்பு விபரங்களையும் ஆராய்ந்த பின்னர், நீதிமன்றத்தினால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதவான் இதன்போது குறிப்பிட்டார்.





