யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியில் இரண்டு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறி, மதுப் போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஆலய வேள்வி நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு நண்பர்கள் மது அருந்திய நிலையில் அவர்களுக்கிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வாய்த் தர்க்கம் தீவிரமடைந்த நிலையில், ஒருவர் மீது கண்ணாடி போத்தலால் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் படுகாயமடைந்த நபர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபருக்கு 150-க்கும் மேற்பட்ட தையல்கள் இடப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





