மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள கவிரவிலை தோட்டத்தின் பெரிய சோலங்கத்தை பிரிவில் உள்ள முன் பள்ளியை தோட்ட அதிகாரி கடந்த 11ஆம் தேதி தன்னிச்சையாக இழுத்துப்பூட்டி உள்ளதாக தெரியவருகின்றது.
குறிப்பிட்ட முன்பள்ளியானது கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சமூக நிறுவனம் ஒன்றினால் தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் கட்டி எழுப்பப்பட்டு தேவையான சகல வசதிகளையும் வழங்கி சிறப்பாக நடத்தி வந்த இவ்வேளையில் தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தை குறிப்பிட்ட முன்பள்ளியில் நடத்துவதற்காக திட்டமிட்டு தோட்ட அதிகாரியினால் இச்செயற்ப்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதற்கு முன் குறிப்பிட்ட தோட்டத்தில் முன்பள்ளி ஒன்று இல்லாத குறையினை நிவர்த்தி செய்வதற்காக கடந்த 20 வருடத்திற்கு முன் இதனை கட்டியெழுப்பி சிறப்பாக நடத்தி வந்த இத்தருணத்தில் தோட்டத்தில் தொழில் புரியும் மற்றும் தொழில் செய்யாத அனைத்து குடியிருப்பாளர்களது பிள்ளைகளும் சிறப்பாக கல்வி கற்று வந்த இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறிப்பிட்ட முன்பள்ளியானது மத்திய மாகாண முன்பிள்ளை பருவ அபிவிருத்தி பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடமாக முன்பள்ளி நிரந்தர பதிவிற்கு உள்வாங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
குறிப்பிட்ட முன்பள்ளியை நடத்தி வந்த சமூக நிறுவனம் கடந்த 11-ம் திகதி மஸ்கெலியா போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்துள்ளதுடன் அட்டன் மனித உரிமை காரியாலயத்திற்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மேலும் இவ்விடயத்தை சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் போன்றவற்றுக்கும் இது தொடர்பாக அறிவிப்பதற்கு தயாராகி வருகின்றது.
முன்பள்ளி கட்டிடத்தை அமைப்பதற்காக அனுமதி கொடுத்திருந்தாலும் தற்போது அதற்கான காணி உறுதி பத்திரம் இம்மை காரணமாக இந் நடவடிக்கையை சாதகமாக பயன்படுத்துவதற்காக தோட்ட நிர்வாகம் முனைந்து வருவதாக தெரிய வருவதுடன் மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் தோட்ட நிர்வாகத்தின் தன்னிச்சையான இச்செய்ப்பாடு கண்டிக்கத்தக்கதாக உள்ளது.
கடந்த காலங்களில் தோட்ட தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்று அதில் பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்ட இத்தருணத்தில் தொடர்ச்சியாக தொழிலாளர்களையும் அங்குள்ள மக்களையும் அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்காக இவ்வாறான செயற்பாடுகளை தோட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம். தோட்ட நிர்வாகத்தின் இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து மக்கள் அரச கட்டமைப்புக்கு உள்வாங்கப்பட வேண்டுமென பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கதாக அமைந்துள்ளதுடன், குறிப்பிட்ட தோட்டத்தில் உள்ள சிறுவர்களின் முன்பள்ளி கல்விக்கு ஏற்படுத்தப்பட்ட அசௌகரியம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





