உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாணவிகள் இருவர் சர்வதேச யோகாசனப் போட்டியில் ஐந்து பதக்கங்களை வென்று குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்தியாவின் அகமதாபாத் நகரில் உள்ள ஏகா அரங்கில் நடைபெற்ற “முதல் உலக யோகாசனப் போட்டி – 2026” இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண மாணவிகள் கலந்து கொண்டனர்.
புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையின் தரம் 10 மாணவி துவிஷா ரமேஷ் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்று அசத்தினார். அதேபோல் புனித வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையைச் சேர்ந்த நிஸாஹரி பிரஸ்ஸண்நாத் ஒரு வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
76 நாடுகளைச் சேர்ந்த 522 யோகாசன வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கடுமையான போட்டியில், இளம் இலங்கை மாணவிகள் வெளிப்படுத்திய திறமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இவர்களின் இந்த வெற்றி, பாடசாலைகளுக்கும், குடும்பத்தினருக்கும் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திற்கும், இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





