பொலித்தீன் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் !

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், எதிர்காலத்தில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

அத்துடன், லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் சிறப்பாகச் செயலாற்றி வருவதாகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. யாழ்ப்பாண நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் தரமற்ற சொப்பிங் பைகள், ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் மற்றும் லஞ்சீற் என்பன இரகசியமாக விற்பனை செய்யப்படுவதாகச் சுகாதார மருத்துவ அதிகாரிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களின் உரிமங்களை ரத்துச் செய்ய உள்ளூராட்சி மன்றங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள புதிய சுற்றாடல் சட்டவரைவு நடைமுறைக்கு வந்ததும், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் மேலும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் எல்.சி.ஆனந்த் தெரிவித்தார்.

குறிப்பாக, நல்லூர் பெருந்திருவிழா உள்ளிட்ட ஆலய உற்சவக் காலங்களில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பிளாஸ்டிக் கப்களின் பாவனையை முற்றாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், யாழ். மாநகர சபை கடைகளுக்கான அனுமதியை வழங்கும்போது இதனை ஒரு கட்டாய நிபந்தனையாக விதிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பெண் நாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சையை இந்த ஆண்டும் தொடர்வது குறித்துக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதற்கான நடைமுறைகளை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெளிவுபடுத்தினார்.

சுமார் 15,000 நாய்களுக்குச் சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகள் கைவசம் தயாராகவுள்ள நிலையில், இம்முறை பெண் நாய்களுடன் சேர்த்து ஆண் நாய்களுக்கும் சமாந்தரமாகக் கருத்தடைச் சிகிச்சையை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

மாகாண சுகாதாரத் திணைக்களமும் தனியானதொரு கருத்தடைத் திட்டத்தை முன்னெடுப்பதால், இரு திணைக்களங்களும் ஒருங்கிணைந்து பிரதேசங்களைப் பகிர்ந்தளித்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இத்திட்டத்தை முன்னெடுக்கும்போது கடந்த ஆண்டு சில இடங்களில் பொதுமக்களின் எதிர்ப்பு எழுந்தமை சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, சட்டரீதியான ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்துப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னரே அடுத்த மாதம் முதல் இத்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், நாய்களைப் பிடிப்பவர்கள் உள்ளிட்ட இத்திட்டத்துடன் தொடர்புடைய பணியாளர்களுக்கான தடுப்பூசிகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

குளங்கள் மற்றும் சுற்றுவட்ட வீதிகளை அழகுபடுத்துவதற்குப் பெருநிறுவனங்களின் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு நிதியைப் பெற்றுக்கொள்வது அல்லது வர்த்தக சங்கங்களின் உதவிகளை நாடுவது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆளுநரால் ஆலோசனை வழங்கப்பட்டது.

உள்ளூராட்சி அமைச்சின் வீட்டுத்திட்டங்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். அத்துடன், அமைச்சின் திடீர் கண்காணிப்புக் குழுவால் (பறக்கும் படை) கண்டறியப்பட்ட குறைபாடுகளும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

உள்ளூராட்சித் திணைக்களத்துக்குப் புதிய பொறியியலாளர்கள் இணைக்கப்பட்டதன் பின்னர் அபிவிருத்தி வேலைகள் விரைவாகவும் சீராகவும் நடைபெறுவதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

மாகாணப் பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கு அறிவிக்காமல், சில திட்டங்கள் நேரடியாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படுவது குறித்து உதவி ஆணையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறான முறையற்ற ஒதுக்கீடுகளைத் தவிர்க்கும் வகையில், சம்மந்தப்பட்ட திட்டப் பணிப்பாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு பிரதம செயலாளரை ஆளுநர் பணித்தார்.

வவுனியா – செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் அண்மையில் மேற்கொண்ட களப் பயணத்தை நினைவுகூர்ந்த ஆளுநர், அங்குள்ள சில கிராமங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாகக் கவலை வெளியிட்டார். அக்கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றுமாறு உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு அவர் பணிப்புரை விடுத்தார்

ஊர்காவற்றுறை – கண்ணகை அம்மன் இறங்குதுறை வீதியின் புனரமைப்புப் பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவடையும் எனவும், இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் எனவும் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காணி ஆணையாளர் அலுவலகம், கிராமிய அபிவிருத்தித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றின் செயற்றிட்ட முன்னேற்றங்களும் விரிவாக ஆராயப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில், பிரதிப் பிரதம செயலாளர்களால் (நிதி, பொறியியல் மற்றும் நிர்வாகம்) சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கு அமைய, மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களின் விவரங்களும் கட்டாயமாக உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த விசேட மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிர்வாகம், திட்டமிடல், நிதி, பொறியியல்), உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைகளின் ஆணையாளர்கள், காணி ஆணையாளர், நகர சபைகளின் செயலாளர்கள், வீதி அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் பணிப்பாளர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள மாவட்டப் பொறியியலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply