நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை நகரிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, தலவாக்கலை வட்டக்கொட பகுதியைச் சேர்ந்த குழுவொன்று கலந்து கொண்டிருந்த திருமண விழாவில் இன்று மாலை சுமார் 4.00 மணியளவில் மதுபோதையில் இருந்த இரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு சென்ற திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது, மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் அவர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகளை மீட்கும் நோக்கில் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மேலதிக பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களும் தாக்குதலுக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் பெரும் முயற்சிக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்தை நேரில் கண்ட பிரதேச மக்கள், தாக்குதலில் ஈடுபட்ட பிற சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பொலிஸாருக்கு உதவி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதலில் ஈடுபட்ட மூவரும், தாக்குதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சிகிச்சைக்காக கொட்டகலை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் கொட்டகலை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் தலவாக்கலை, லிந்துலை மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





