இலங்கைக்கு அதிக பணம் அனுப்பும் நாடாக குவைத் முதலிடம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணப் பரிமாற்றங்களில் குவைத் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, 

ஆண்டுதோறும் சுமார் 80,000 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக குவைத்திற்குச் செல்வதாகக் கூறினார். இது, ஆண்டுதோறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களில் சுமார் 30 சதவீதமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் குவைத்தில் பணியாற்றிய இலங்கையர்கள் 893 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும், இதன் மூலம் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களில் குவைத் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பணப் பரிமாற்றங்களில் கத்தார் இரண்டாவது இடத்திலும், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மூன்றாவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சவூதி அரேபியா மற்றும் அமெரிக்காவும் இலங்கைக்கு அதிகளவு பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், இத்தாலி, பிரித்தானியா, மாலைத்தீவு, அவுஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களும் நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய்க்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பணப் பரிமாற்றங்கள், இலங்கையின் முக்கிய அந்நியச் செலாவணி வருவாய் மூலங்களில் ஒன்றாக தொடர்ந்து விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply