கிளிநொச்சியில் STF – பொதுமக்கள் மோதலால் பதற்றம்; சிறுவர்கள் உட்பட 14 பேர் சிறையில்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினருக்கும் (STF) பொதுமக்களுக்கும் இடையே நேற்று  ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, சிறுவர்கள், முதியவர்கள், பாடசாலை மாணவிகள் உட்பட 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நோக்கில் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். 

அங்கு காட்டுப்பகுதிக்குள் உழவு இயந்திரத்துடன் (Tractor) இருந்த ஒருவரை அவர்கள் கைது செய்ய முற்பட்டபோது, பொதுமக்களுக்கும் அதிரடிப்படையினருக்கும் இடையே கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.

இதன்போது, கைது செய்யப்படவிருந்த நபரின் உறவினர்களும் அயலவர்களும் இணைந்து விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மேலதிக அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் இரு சிறு குழந்தைகள், அவர்களின் தாய், தந்தை, இரண்டு பாடசாலை மாணவிகள் மற்றும் முதியவர்கள் அடங்குவதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply