குருநாகல், வெல்லவ பகுதியில் இன்று (23) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 46 வயதுடைய பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை 6.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பெண் உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கடந்த காலத்தில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் நபரொருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த பெண் முன்னர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியிருந்தபோது, சந்தேக நபருடன் வாழ்ந்து வந்ததாகவும், பின்னர் மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியதன் பின்னர் தனது பிள்ளைகளின் வேண்டுகோளுக்கிணங்க சட்டப்பூர்வ கணவருடன் வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அந்த நிலையில், கணவரின் வீட்டில் தங்கியிருந்தபோதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர் வீட்டிற்கு அண்மையிலுள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்து பெண்ணை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





