வலிக்கண்டி பகுதியில் மீண்டும் தீவைப்பு: கரும்புகையால் போக்குவரத்துக்கு இடையூறு

பருத்தித்துறை – மருதங்கேணி பிரதான வீதியின் வலிக்கண்டி பகுதியில் இன்று (23) விஷமிகளால் சம்பு  புற் தரவைக்கு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீப்பரவலால் ஏற்பட்ட கரும்புகை சில நிமிடங்கள் அந்தப் பகுதியில் பரவி காணப்பட்டதுடன், வீதியில் பயணித்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

பருத்தித்துறையிலிருந்து மருதங்கேணி நோக்கியும், மருதங்கேணியிலிருந்து பருத்தித்துறை நோக்கியும் பயணித்தவர்கள் புகைமூட்டம் காரணமாக சில நிமிடங்கள் தங்களது பயணத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தீ குறுகிய நேரத்திலேயே தானாகவே கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, போக்குவரத்து வழமைக்குத் திரும்பியதுடன் பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.

இதற்கு முன்னரும் சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் சம்புப் புற்தரவைக்கு தீ வைக்கப்பட்டிருந்தது. அச்சம்பவத்தில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பனைமரங்கள் உள்ளிட்ட அதிகளவான மரங்கள் எரிந்து சேதமடைந்திருந்தன.

அப்போது உடனடியாக நடவடிக்கை எடுத்த பருத்தித்துறை பிரதேச சபையினர் தீயை கட்டுப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இடம்பெறும் இத்தகைய தீவைப்பு சம்பவங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply