பஸ்ஸைச் செலுத்திக் கொண்டிருந்த போதே மாரடைப்பு; சாரதி பரிதாப உயிரிழப்பு!

கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பயணிகள் பஸ்ஸின் சாரதி, பஸ்ஸை செலுத்திக் கொண்டிருந்த போதே திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியை விட்டு விலகி வெல்லம்பிட்டிய பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் அம்பாறை இலங்கை போக்குவரத்துச் சபைச் சாலையோடு இணைந்ததாகப் பணியாற்றிய 44 வயதுடைய சாரதியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது:-

கொழும்பு மத்திய பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை 5.30 மணியளவில் அம்பாறை நோக்கிப் புறப்பட்ட இந்தப் பயணிகள் பஸ், வெல்லம்பிட்டிய, அம்பகஹ சந்திக்கு அருகில் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர், வீதியில் நின்ற பெண் பயணி ஒருவரை பஸ்ஸில் ஏற்றுவதற்காகச் சாரதி பஸ்ஸை  நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் பஸ்ஸை முன்னோக்கிச் செலுத்திய போதே அவர் திடீரென ஆசனத்திலேயே சுருண்டு வீழ்ந்துள்ளார்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வேகமாகக் பாய்ந்து, அங்கிருந்த பஸ் நிறுத்துமிடம், தொலைபேசிக் கம்பம், வீடொன்றின் பிரதான வாயில் மற்றும் சுவர் என்பவற்றின் மீது பலத்த வேகத்துடன் மோதி நின்றுள்ளது. இதனால் பஸ்ஸின் முன்பகுதி மற்றும் பொதுச் சொத்துக்களுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

விபத்து நிகழ்ந்தவுடனே, பஸ்ஸில் இருந்த பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மயக்கமுற்ற நிலையில் காணப்பட்ட சாரதியை மீட்டு அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற வேளையில் பஸ்ஸினுள் சுமார் 50 இற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்கள் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் என்று வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Leave a Reply