மின் கட்டணத்தைக் குறைக்க அதிரடி நடவடிக்கை: இலங்கைக்கு மேலும் 7 பிரம்மாண்ட மின்கல சேமிப்பு கட்டமைப்புகள்!

நாட்டின் மின்சாரக் கட்டமைப்பை நிலைப்படுத்துவதற்கும், நுகர்வோருக்கு மின்கட்டணத்தில் நிவாரணம் வழங்குவதற்கும் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘மின்கல சக்தி சேமிப்பு முறைமை’  திட்டத்தின் கீழ், மேலும் ஏழு பிரம்மாண்ட களஞ்சிய கட்டமைப்புகள் கொழும்புத் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

 

இலங்கை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு இத்தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த ஏழு சக்தி சேமிப்பு களஞ்சிய கட்டமைப்புகளும் பாணந்துறை, பெலியத்த, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, வவுணதீவு, வாழைச்சேனை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் உள்ள மின்சாரப் பரிமாற்ற உப நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படவுள்ளன. 

இந்த ஏழு மின்கல சக்தி சேமிப்பு கட்டமைப்புகளும் ஒட்டுமொத்தமாக 280 மெகாவோட்  மின்சாரத்தைச் சேமிக்கும் திறன் கொண்டவை ஆகும். இவற்றின் மூலம் தினமும் 70 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் விநியோகக் கட்டமைப்புக்கு (National Grid) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாத ஆரம்பத்தில் 8 மின்கல கட்டமைப்புகள் கொண்டுவரப்பட்டன. தெரிவு செய்யப்பட்ட உப நிலையங்களுக்கு அருகில் அவற்றை நிறுவும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இப்பணிகள் அனைத்தும் வரும் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதன் மூலம் கூடுதலாக 80 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் விநியோகக் கட்டமைப்புக்கு பங்களிக்கப்படும்.

குறித்த நவீன மின்சேமிப்பு முறைமைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு, மின்சக்தி அமைச்சுக்குச் சொந்தமான “தேசிய முறைமைச் செயற்பாட்டாளர் தனியார் நிறுவனத்திடம்” (National System Operator) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் பராமரிப்புப் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டின் மின்சார விநியோகம் சீரடைவதுடன், பொதுமக்களின் மின் கட்டணச் சுமையைக் குறைப்பதற்கான தகுந்த நிவாரணங்களை வழங்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

Leave a Reply