ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற மதுபான விருந்தொன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹங்குருவெல பகுதியைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் தீவிர உறுப்பினராகவும், ஹம்பாந்தோட்டை மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளராகவும் பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (27) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, நீண்ட காலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு ஒன்று திடீரென மோதலாக மாறியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் கூர்மையான ஆயுதத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் இளைஞர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 29 வயதுடைய ஒருவர் மெதமுலன பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மோதலின் போது சந்தேகநபரின் தாயாரும் காயமடைந்து வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது வீரகெட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.





