குளியாப்பிட்டிய கீழ் தியதொர, மாதரவத்த பகுதியில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான உற்பத்தி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று (31) விசேட பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த முற்றுகையின் போது, சட்டவிரோத மதுபான காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் 7,560,000 மில்லி லீற்றர் கோடா அடங்கிய 40 பீப்பாய்கள், 187,500 மில்லி லீற்றர் கசிப்பு அடங்கிய 250 போத்தல்கள், 07 சுருள்களைக் கொண்ட 02 செப்புச் சுருள்கள், 02 எரிவாயு அடுப்புகள் மற்றும் 12.5 கிலோகிராம் கொண்ட 04 எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கைப்பற்றப்பட்ட கோடாவை பயன்படுத்தி சட்டவிரோத மதுபானத்தை உற்பத்தி செய்து, அதனை பிரதேசம் முழுவதும் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




