நான் நாட்டிற்காக ஆற்றிய சேவை பாராட்டப்படவில்லை! – பசில் கவலை

சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், நாட்டிற்கும், பொருளாதாரத்திற்கும் தாம் ஆற்றிய சேவை சிலரால் பாராட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தனது நெருங்கிய நண்பர்கள் குழுவிடம் அறிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான தீர்மானம் இந்த வாரத்தில் நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என பசில் ராஜபக்ச அறிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெலும் மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் தலைமையகத்தில் பசில் ராஜபக்ச கலந்துகொள்ளும் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை நடைபெறவுள்ளது.

இதன்போது தனது பதவி விலகல் தொடர்பில் பசில் ராஜபக்ச கருத்து வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நாட்டின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசில் ராஜபக்சவின் இராஜினாமாவை அடுத்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் அது முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான முக்கிய அமைச்சுப் பதவி எனவும் அறியமுடிகிறது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply