சுமார் 4500 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு இன்று கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக வெல்லமன்கர மற்றும் கலமிடடிய ஆகிய இடங்களில் அமைக்கப்படடுள்ளதைப் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மீன்பிடித் துறைமுகங்கள் பருத்தித்துறை, பேசாலை, குருநகர் ஆகிய இடங்களிலும் விரைவில் உருவாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை, கலமிட்டிய மற்றும் புத்தளம் மாவட்டத்தில் வெல்லமன்கர ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டு கடற்றொழிலாளர்களின் செயற்பாட்டிற்காக கையளிக்ககும் நிகழ்வு இன்று காலை கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
நாட்டின் சூழ்நிலை கருதி செலவுகளை கட்டுப்படுத்தும் வகையிலும் நேரத்தை மீதப்படுத்தும் வகைகையிலும் இன்று இந்த நிகழ்வு எமது அமைச்சில் இருந்து காணொளியூடாக நடைபெற்றது. அத்துடன் இதனை நிறைவுறுத்துவதற்காக ஒத்துழைப்புகளை வழங்கியிருந்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் இந்த துறைமுகத்தினூடாக 500 இற்கு மேற்பட்ட ஆழ்கடற் படகுகளும் 300 மேற்பட்ட ஒருநாள் படுகுகளினூடாகவும் இப்பகதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொழிலை செய்வதற்கான வாய்ப்பும் உருவாக்கி கொடுத்துள்ளோம்.
இதேபோன்று பருத்தித்துறை, பேசாலை, குருநகர் ஆகிய இடங்களிலும் விரைவில் மீன்பிடி துறைமுகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
ஆனாலும் துரதிஸ்டவசமாக சில தமிழ் பிரதிநிதிகள் அதை தடுக்கின்ற வகையில் செயற்பட்டு வருகின்றனர். அதாவது குறித்த சில தமிழ் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்திகளை தடுப்பதையே தமது வழமையான செயலாக கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
அவ்வாறான ஒரு பொய்த்தனமான பிரசாரங்களையே குறித்த பருத்தித்துறை, பேசாலை, குருநகர் துறைமுக உருவாக்கத்திலும் அவர்களால் செய்யப்பட்டுவரகின்றது. ஆனாலும் அவர்களது தடைகளையும் பொய்யான பிரசாரங்களையும் கண்டுகொள்ளாது மக்களின் தேவைப்பாடுகளை நிறைவுசெய்து கொடுப்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
இதேநேரம் எமது காலத்தில் எந்தெந்த பிரதேசங்களில் மீன்படி முறைமுகங்கள் உருவாக்கப்படுகின்றதோ அந்தந்த பிரதேச மக்களுக்கே அந்த துறைமுகங்களில் முன்னுரிமையும் கூடிய உரிமையும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





