மன்னார் குடும்பஸ்தர் படுகொலையில் திடீர் திருப்பம்!

மன்னார்  நொச்சிக்குளம்  கிராமத்தில் நேற்று முன்தினம்( 10 ஆம் திகதி ) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில்  குடும்பஸ்தர்கள் இருவர்  படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய   சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகி காடுகளில் பதுங்கியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
தெரிவித்தார்.

குறித்த படுகொலை சம்பவத்தில்  நொச்சி குளத்தைச்  சேர்ந்த   16 ஆண்கள்  நேரடியாக தொடர்பு பட்ட நிலையில்   அவர்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர்களை விரைவில் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள விசேட  பொலிஸ் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாக உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். 

மேலும் குறித்த படுகொலையில்  வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் பங்கேற்றுள்ளமை குறித்து பொலிஸ் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது டன், குறித்த மூவரும்  மேற்படி கொலைகளை மேற்கொள்வதற்காகவே  வேறு மாவட்டத்தில் இருந்து  நொச்சிக்குளத்திற்கு அழைத்துவரப்பட்டு இருக்கலாம்,  என புலன் விசாரணையில்  தெரிய வருவதாக  உயிலங்குளம் பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி  மேலும் குறிப்பிட்டார்.

நொச்சிக்குளம்  படுகொலையுடன் சம்மந்தப்பட்டவர்களும்   அவர்களின் குடும்பத்தினரும் தற்பொழுது அக்கிராமத்தில் இருந்து தலைமறைவாகி, உறவினர்களின் வீடுகள் மற்றும் காட்டுப்பகுதிகளில் மறைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுவதுடன் பொலிஸாரும் இவர்களின் மறைவிடம் குறித்து  விசாரணை செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி  காலை 11 மணியளவில் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த வாள்வெட்டு சம்பவத்தில் இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன்  இருவர் படுகாயமடைந்தனர். 

குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய  யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் உடன் பிறந்த  சகோதரர்கள்  இருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த   சம்பவத்தை அடுத்து, கடந்த வெள்ளி நண்பகல் கொலையுண்ட சகோதரர்கள் இருவரின் சடலங்களும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக கடந்த வெள்ளி மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு  பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

அத்துடன் மேற்படி சம்பவத்தில்  படுகாயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களும்  மன்னார் உயிலங்குளத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த  சகோதர்களும், உறவினர்களும் என பொலிஸாரினால்  தெரிவிக்கப்படுகிறது.

 மேலும் குறித்த படுகொலை சம்பவத்திற்கு பிரதான காரணமாக கடந்த நான்காம் திகதி உயிலங்குளத்தில் நடந்த  மாட்டு வண்டிச்சாவரியே காரணமாக இருந்ததாக  தெரிவிக்கப்படும் நிலையில்  குறித்த கொலைக்கு முக்கிய காரணம் உயிலங்குளத்தைச் சேர்ந்த சிலருக்கும், நொச்சிக்குளத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையில் ஒரு   ஐந்து வருடங்களுக்கு மேலாக நிலவும் பகமையே காரணம் என நொச்சிக்குளம் அயல் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதே சமயம் கடந்த வெள்ளி காலை நொச்சிக்குளம் பகுதியில் நிகழ்ந்த  குறித்த இரட்டைக்கொலை சம்பவம் மன்னார் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும்  பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன் குறித்த படுகொலை சம்பவம்  மன்னார் நொச்சிக்குளம் கிராம மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், அக்கிராமத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply