
அரச ஊழியர்களின் வெள்ளிக்கிழமை விடுமுறை வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவையால் நேற்று வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
தற்போது நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலையுயர்வு காரணமாக அரச ஊழியர்களுக்கு தமது போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் தோன்றியுள்ளன.
இந்த நிலையில் வாரத்தில் கடமையாற்றும் ஒரு நாள் அரச விடுமுறையை வழங்கி தொடர்ந்து வரும் காலங்களில் ஏற்படக்கூடுமென எதிர்ப்பார்க்கின்ற உணவுத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக தமது வீட்டுத்தோட்டங்களில் அல்லது வேறு இடங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இதற்காக நீர் வழங்கல், மின்சார விநியோகம், சுகாதாரம், பாதுகாப்பு சேவைகள், கல்வி, போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களை எதிர்வரும் 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஒரு திட்டத்தைக் கடந்த வாரம் சமர்ப்பித்தார்.
அந்த திட்டத்துக்கு அமைவாக அனைத்தையும் ஆராய்ந்து அமைச்சரவை வெள்ளிக்கிழமை விடுமுறைக்கு அனுமதி வழங்கியது.- என்றுள்ளது.