
தலவாக்கலை, ஜுன் 14
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் இன்று (14) செவ்வாய்கிழமை மாலை மரம் ஒன்றினை வெட்டிக் கொண்டிருந்த நபர் ஒருவர் அம்மரத்தின் ஒரு பகுதி நெஞ்சு பகுதியில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை மணிமாறன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹேலீஸ் பிளான்டேசன் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டப்படுகின்றது.
அதில் குறித்த தொழிலாளியும் மற்றொரு தொழிலாளியும் ஸ்கல்பா தோட்டத்தில் பள்ளதாக்கு பகுதியொன்றில் ஏற்கனவே வெட்டப்பட்டிருந்த இரண்டு மரங்கள் ஒன்றோடு ஒன்றாக கீழே கிடந்தபோது ஒரு மரத்தின் மேலே நின்று அதனை துண்டு துண்டாக வெட்டிக் கொண்டிருந்த போது அதில் ஒரு மரத்துண்டு வழுக்கி வந்து குறித்த நபரின் நெஞ்சு பகுதியில் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.