தடைக் காலம் முடியும் முன் அனுமதியின்றி மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்!

மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ள நிலையில், மாலை 4 மணிக்கு அரசு அனுமதி சீட்டு பெறாமல் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான தடை கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கியது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இன்றி தவித்தனர்.

இதன் காரணமாக அவர்கள் வெளிமாவட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்றனர். சிலர் உள்ளூரிலேயே தங்களுக்கு கிடைத்த வேலையை செய்து வந்தனர்.

மேலும் மீன்பிடி தடை காலத்தின் போது விசைப்படகுகள், வலைகள், மீன்பிடி சாதனங்களை பழுது பார்க்கும் பணியிலும் மீனவர்கள் ஈடுட்டனர்.

இந்த நிலையில் 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழக மீன் வளத்துறையினரால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் மீன் வளத்துறையினரின் அனுமதியின்றி இன்று மாலை சுமார் 4 மணிக்கு மேல் 400க்கும் மேற்பட்ட மீனபிடி விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் தாங்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் போது இயற்கை பேரிடர்களில் இருந்து காத்து கொள்ளவும், நடுக்கடலில் இலங்கை கடற்படை பிரச்சனையின்றி மீன்பிடிக்க வேண்டும், நல்ல மீன்பாடு கிடைக்க வேண்டும் என இறைவனிடம் பிராத்தனை செய்து மீன்பிடி விசைப்படகுகளுக்கு வாழை மரம், தோரணம் கட்டி உற்சாகத்துடன் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்வதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *