பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும்- மீனாக்ஷி

பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் ஊடாக பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே அடிப்படையாக இருக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கமளித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகிய கட்டமைப்புக்களின் மூலமான உதவிகள் என்பன தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தியிருந்ததார்.

அத்தோடு, பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்படக்கூடிய வறுமை, மந்தபோசணைக்குறைபாடு உள்ளிட்ட சமூக ரீதியிலான தாக்கங்கள் குறித்தும் பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தக் கருத்துக்களை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள மீனாக்ஷி கங்குலி, அரசியலமைப்பின் ஊடாக பாதுகாப்பை உறுதிப்படுத்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் ஆகியவையே கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அடிப்படைத் திறவுகோளாகும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *