ஆசிரியர் என்றால் இழக்காரமா? தனியொருவராய் போராடிய பாடசாலை பதிலதிபர்

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதில் அதிபர் ஒருவர், இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த பெண் பதிலதிபர், தனது பிள்ளையுடன் இவ்வாறு காலை 10.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் .

மேலும் தெரியவருகையில்,

அரச உத்தியோகத்தர்களிற்கு இன்று எரிபொருள் வழங்கப்படமாட்டாது என எரிபொருள் விநியோஸ்தர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த சிலர், அரச உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசும் செயற்பாடுகள் பரவலாக இடம்பெறுவது அவதானிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தனது கடமைக்கு செல்ல எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற, குறித்த பெண் பதிலதிபரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் .

இது தொடர்பில் குறித்த பெண் பதில் அதிபரிடம் வினவிய பொழுது,

கடமைக்கு செல்லாவிட்டால் விடுமுறையாக்கப்படுகிறது.

கடமைக்கு செல்ல வந்த என்னை தரக்குறைவாக பேசுகின்றனர்.

கல்வி வேண்டாம், பெற்றோலே வேண்டும் என்கின்றனர்.

ஆசிரியர்கள் என்றால் தரக்குறைவானவர்கள் இல்லை, உங்கள் பிள்ளைகளுக்கு தான் கல்வியை புகட்டுகின்றோம்.

இவ்வாறு நாட்டின் நிலைமை தொடர்ந்து சென்றால் பிள்ளைகள் முதல் எழுத்து கூட அறியாதவர்களாக வளர்வார்கள்.

எங்களிற்கு முறையான எரிபொருள் கிடைக்க வேண்டும். இல்லையேல் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது.

நாகரீகமின்றி தரக்குறைவாக பேசுமளவிற்கு ஆசிரியர்கள் இல்லை. இதற்கு நியாயமான தீர்வு வேண்டும். அதுவரை ஆசிரியர்கள் பணிக்கு செல்லாது போராட வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் தொழிற்சங்கத்திற்கு அறிவித்துள்ளேன். நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும். எமது கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் பதில் அதிபர் தெரிவித்தார்.

குறித்த பெண் பதிலதிபருடன் பொலிசார் மற்றும் பொதுமக்கள் சிலர் கலந்துரையாடி ,போராட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்தனர்.

எனினும் நிரந்தர தீர்வு எடுக்கப்பட வேண்டும் என கூறி, போராட்டம் கைவிடப்பட்டது.

குறித்த பதில் அதிபர் பாடசாலை கடமைக்கு செல்வதற்கு எரிபொருள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply