இந்திய அதிகாரிகள் நேற்று ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து உதவி தொடர்பாக கலந்துரையாடினர்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஆராய்வதற்கு கொழும்புக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாட்ரா உள்ளிட்ட தூதுகுழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாட்ரா, இந்திய பிரதான பொருளாதார ஆலோசகர் வீ. ஆனந்த் நாகேஸ்வரன் மற்றும் இந்திய பொருளாதார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் வியாழக்கிழமை கொழும்பை வந்தடைந்தனர்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்த இந்திய உயர்மட்டக் குழுவினர், இலங்கைக்குத் தொடர்ந்து உதவியளிப்பது குறித்து விரிவாக உரையாடியதாக இலங்கை நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இச் சந்திப்பில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் உள்ளிட்ட இராஜதந்திரிகளும் பங்குபற்றியிருந்தனர். இதுவரை நான்கு பில்லியன் கடன்களை இந்தியா வழங்கியுள்ளது.

இந்தியக் கடன் வசதியின் கீழ் எரிபொருட்கள், மருந்து பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. ஆனால் அடுத்தகட்ட உதவிக்கான ஒப்பந்தங்கள் இதுவரை செய்யப்படவில்லை. உதவிகளுக்குரிய ஒப்பந்தங்களைச் செய்வது குறித்து இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவினர் விரிவாகப் பேச்சு நடத்தியுள்ளனர்.

ஆனால் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க இதுவரை 31 ஆயிரம் கோடி ரூபாய்கள் அளவுக்கு இந்தியாவிடம் இருந்து கடன்கள் பெறப்பட்டுள்ளன. இக் கடன் மீளச் செலுத்தப்பட வேண்டியவை என்று கூறினார்.

Leave a Reply