தென்னிந்திய திரைப்பட நடிகர் பிளாக் பாண்டியினுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதமொன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழக திரை நடிகர் சே. லிங்கேஸ்வரன் (பிளாக் பாண்டி)அவர்களுக்கு,…நேசமுடன் வணக்கம்!
இடர்களை எதிர்கொள்ளும் இலங்கை வாழ் எமது மக்களுக்கு ‘உதவும் மனிதம்’ என்ற உணர்வெழுச்சியுடன் நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதை அகம் மகிழ்ந்து வரவேற்கின்றேன்.
தமிழக மக்களிடமிருந்து அத்தியாவசிய பொருட்களை சேகரித்து நீங்களாகவே எமது மக்களுக்கு அனுப்ப முன்வந்திருக்கும் உங்கள் பணிஈழத்தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தொப்புளக்கொடி உணர்விற்கும், தொன்மைக்குடி உறவிற்கும் மறுபடியும் உயிர் கொடுத்திருக்கிறது.நீங்களே குறிப்பிட்டது போல், வெறும் சொல்லால் மட்டுமன்றி செயலாலும் இந்தியா எமது மக்களை நேசிக்கின்றது என்பதை உங்கள் ‘உதவும் மனிதம்’ வெளிப்படுத்துயுள்ளது.
தமிழர்கள், இந்தியர்கள் என இரு அடையாளங்களையும் ஒன்றாக கொண்டிருக்கும் தமிழக மக்களை போலவே,.. நாம் இலங்கையர்கள் என்பதால் தமிழர்கள் என்ற அடையாளத்தையோ,. தமிழர்கள் என்பதால் இலங்கையர்கள் என்ற உணர்வுகளையோ ஒரு போதும் இழந்துவிட முடியாதவர்கள்.
பேசும் மொழியால் இணையும் எங்கள் உறவுகள் நீடித்து வளரட்டும்.உங்கள் மனிதாபிமான உதவிப்பொருட்களை எமது கப்பல் சேவை மூலம்எடுத்து வர நான் ஆவன செய்கிறேன். இது குறித்து ஈழத்தமிழ் மக்களின் சார்பாகவும், இலங்கை அரசு சார்பாகவும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்





